பாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 12 இக்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஷாங்க் மாகாணத்தில் உள்ள மிசி கவுண்டி பாடசாலை மாணவர்கள் நேற்று (27) பாடசாலை முடிந்து மாணவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்த போது அங்கு வந்த 28 வயது நபர், திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் ஏழு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும், 12 இக்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த பொலிஸார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றதுடன் தாக்குதல் நடத்திய நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், இறந்தவர்களில் 5 பெண்கள், 2 ஆண்கள் என்பதும், தாக்குதல் நடத்தியவர் முன்னாள் பள்ளி மாணவர் என்பதும் தெரிய வந்தது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்று என சீனா தெரிவித்துள்ளது.