ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தனது பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இவர் உலகெங்கும் மனித உரிமை மீறல்களுக்காகக் குரல் கொடுத்து, கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி இன்று அப் பணியிலிருந்து விடைபெறுகிறார்.
இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பாக, சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடக் காரணமாக இருந்த அவர் இலங்கைக்கு நேரடியாகப் பயணம் மேற்கொண்டும் தனது பணிகளை முன்னெடுத்திருந்தார்.
குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போதான போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி இலங்கைக்கு நேரடியாக பயணம் மேற்கொண்டு ஒருவார காலம் தங்கியிருந்து நவநீதம்பிள்ளை ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று, தனது பதவியிலிருந்து ஓய்வு பெறும் அவர் சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், இலங்கைக்கு எதிராக, போர் குற்ற விசாரணையை நடத்திவரும் குழு சிறப்பான முறையில் செயல்படும் என நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை ஓய்வு பெறுவதையடுத்து, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு புதிய ஆணையராக ஏற்கனவே ஐ.நா.சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள, ஜோர்தான் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் நாளை செப்ரெம்பர் முதலாம் திகதி முறைப்படி பொறுப்பேற்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.