கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் மாயமான விவகாரம் அனைவரும் அறிந்ததே.
அது குறித்து அவுஸ்திரேலியாவின் தேடுதல் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார்.
கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லையாம்.
ஆகையினால் இது மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஃபர்கோ டிஸ்கவரி கப்பல் தற்போது இந்தியப்பெருங்கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கு உதவியாக தற்போது மலேசியாவின் கோ ஃபீனிக்ஸ் என்ற கப்பலும் தேடுதல் நடவடிக்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலில் இதுவரை ஆய்வு செய்யாத ஆழ்கடல் பகுதிகளையெல்லாம் அவுஸ்திரேலிய தேடுதல் அணி ஆய்வு செய்து வருகிறது.
காணாமல் போய் உலக வரலாற்றில் புதிராகிப்போன மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்கும் இந்த தேடலில் கடல் அடித் தரை பற்றிய அரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில் 2000 மீட்டர்கள் உயரமுள்ள எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடரும் இந்த மர்மத்தினை எப்படியாவது விடுவித்து விடுவது என்று தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.